ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி


ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் பலி
x
தினத்தந்தி 8 Nov 2019 3:52 AM GMT (Updated: 8 Nov 2019 9:11 PM GMT)

ஈரானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 5 பேர் பலியாகி உள்ளனர்.

டெஹ்ரான்,

ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அசர்பைஜன் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி எழுந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் பலியாகி உள்ளனர்; 120-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டு ஈரானின் பாம் நகரில் ரிக்டர் அளவுகோலில் 6.6 புள்ளிகளாக ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 26 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story