கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு


கர்தார்பூர் பாதை திறப்பு: அமெரிக்கா வரவேற்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 5:52 PM GMT (Updated: 9 Nov 2019 5:52 PM GMT)

கர்தார்பூர் பாதை திறக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

வாஷிங்டன்,

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், தனது வாழ்வின் கடைசி 18 ஆண்டுகளை பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அங்கு அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சீக்கியர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வருவது கடமையாக உள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கர்தார்பூர் சாகிப் குருத்வாரா உள்ளது.

இதற்காக சீக்கிய பக்தர்கள், சென்று வருவதற்கு வசதியாக இரு நாடுகளுக்கு இடையே, 3 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் திட்டத்தை, இரு நாடுகளும் செயல்படுத்தி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் கர்தார்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவிலிருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை யாத்ரீகர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சீக்கியர்கள், புனித யாத்திரை செல்ல அமைக்கப்பட்ட பாதை இன்று முறைப்படி திறக்கப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கர்தார்பூர் வழித்தடம் எனும் பெயரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய எல்லை வழி திறக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும், சிறந்த மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு படி இது என்றும், குருநானக்கின் 550வது பிறந்த தினத்தின்போது எல்லை தாண்டி கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story