ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 150 வீடுகள் தரைமட்டம் - 2 பேர் பலி


ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 150 வீடுகள் தரைமட்டம் - 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Nov 2019 11:29 PM GMT (Updated: 9 Nov 2019 11:29 PM GMT)

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 150 வீடுகள் எரிந்து இடிந்து தரை மட்டமாகின. அத்துடன் 2 பேர் பலியாகினர்.

சிட்னி,

ஆஸ்திரேலிய நாட்டில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. கொளுந்து விட்டு எரியும் இந்தத் தீ அந்தப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.

இந்த தீயில் சிக்கி 150 வீடுகள் எரிந்து இடிந்து தரை மட்டமாகின. அத்துடன் 2 பேர் உயிரோடு எரிந்து கரிக்கட்டைகள் போல ஆயினர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி நியூ சவுத் வேல்ஸ் மாகாண ஊரக தீயணைப்பு சேவை டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நியூ சவுத் வேல்ஸ் காட்டுத்தீயில் குறைந்த பட்சம் 150 வீடுகள் நாசமாகி விட்டன. 2 பேர் இந்த தீயில் கருகி பலியானது உறுதியாகி இருக்கிறது. 7 பேரை காணவில்லை” என கூறியது.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் காட்டுத்தீ பரவி வருவதால் அந்தப் பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியேறி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

81 இடங்களில் காட்டுத்தீ பிடித்துள்ளதாகவும், 43 இடங்களில் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீயில் ஏராளமான விலங்குகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Next Story