அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் 2-வது அணு உலை கட்டுமான பணிகளை தொடங்கியது ஈரான்


அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் 2-வது அணு உலை கட்டுமான பணிகளை தொடங்கியது ஈரான்
x
தினத்தந்தி 11 Nov 2019 10:39 AM GMT (Updated: 11 Nov 2019 10:53 PM GMT)

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ஈரான் 2-வது அணு உலைக்கான கட்டுமான பணிகளை தொடங்கியது.

டெஹ்ரான்,

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கி கொள்ளவும் இரு தரப்பிலும் அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்த நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்து கொள்ளலாம், எந்த அளவுக்கு அதை செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்தபோது கையெழுத்தான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி வந்த ஜனாதிபதி டிரம்ப், இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்.

அதுமட்டும் இன்றி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும் ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். அதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் அடுத்தடுத்து மீறி வருகிறது.

அந்த வகையில் தடை விதிக்கப்பட்ட போர்டோ நகர நிலத்தடி அணுசக்தி மையத்தில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் அண்மையில் தொடங்கியது. இதனை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் வன்மையாக கண்டித்தன.

இந்தநிலையில் அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் 2-வது அணு உலைக்கான கட்டுமான பணிகளை ஈரான் தொடங்கி உள்ளது. அந்த நாட்டின் துறைமுக நகரமான புஷெரில் இந்த அணு உலை கட்டப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹி உள்பட முக்கிய அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அலி அக்பர் சலேஹி, அமெரிக்காவின் பொருளாதார தடையையும், தங்கள் நாட்டின் கச்சா எண்ணெயை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்ததையும் சுட்டிக் காட்டி அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார்.

புதிய அணு உலை குறித்து அவர் கூறுகையில், “இந்த அணு உலை ரஷியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. அணுசக்தி நமக்கு நம்பகமான மின்சாரத்தை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு மின் நிலையமும் ஆண்டுக்கு 11 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை சேமிக்கிறது. எனவே 3-வது அணு உலையை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது” என்றார்.

தங்களது அணு உலையில் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுவதாக ஈரான் கூறினாலும், அதனை மறுக்கும் அமெரிக்கா ஈரான் அணு உலையில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகிறது. எனவே புஷெரில் கட்டப்படும் அணு உலை ஐ.நா. சபையின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.


Next Story