தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம்: அமெரிக்காவில், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து


தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம்: அமெரிக்காவில், ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்து
x
தினத்தந்தி 13 Nov 2019 11:30 PM GMT (Updated: 13 Nov 2019 9:39 PM GMT)

அமெரிக்காவில் தமிழகத்துக்கு ரூ.710 கோடி முதலீடு திரட்டும் ஒப்பந்தம் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கையெழுத்தானது.

சிகாகோ,

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிகாகோ வீட்டு வசதி குழும அலுவலகத்திற்கு சென்று, அங்கு செயல்படுத்தப்படும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை திட்டங்களுக்கு தேவையான முதலீடுகள் ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர், சிகாகோவில் நடந்த ‘இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை’ கருத்தரங்கில் பங்கேற்றார்.

அப்போது தமிழகத்தில் தொழில் முதலீடுகள் செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழில்களில் முதலீடு செய்வதற்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன. கட்டுமான திட்டங்கள் அதிகம் இருப்பதால் அதில் கட்டுமான கம்பெனிகளும், அந்த தொழிலில் ஆர்வம் உள்ளவர்களும் பங்கேற்கலாம். வரி திரும்ப பெறுதல், மூலதன மானியம், திறன்மிகுந்த மனிதவளம், தரமான மின்சார வினியோகம், 6 விமான நிலையங்கள், 4 துறைமுகங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், திறமை மற்றும் போட்டிக்கு புகழ் பெற்ற மாநிலம் போன்றவை தமிழகத்தில் முதலீடுகளை செய்ய ஏற்ற ரம்மியமான சூழலாக உள்ளது.

தமிழகம் தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலத்தில் உள்ளது. தொழில்புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய எங்கள் மாநிலம் தயாராக இருக்கிறது. ஆகவே தமிழகத்தின் வளர்ச்சி பாதையில் நீங்கள் அனைவரும் இணையவேண்டும். தமிழகத்தில் நேரடியாகவோ, உட்கட்டமைப்பு உறைவிட நிதியிலோ முதலீடு செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் உறைவிட நிதிக்கு ரூ.710 கோடி மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ‘குளோபல் ஸ்டிரேஜடிக் அலையன்ஸ் இன்க்’ தலைவர் டாக்டர் விஜய் ஜி.பிரபாகர் மற்றும் தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அப்போது, தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்குமார், இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story