குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்


குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்
x
தினத்தந்தி 14 Nov 2019 3:26 AM GMT (Updated: 14 Nov 2019 3:26 AM GMT)

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

பிரேசிலியா, 

பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற்று வருகிறது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். 

அப்போது,   பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.  இந்த சந்திப்பின் போது, இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருமாறு பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். என்று சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

Next Story