தென்கொரியாவில் ஓடும் ரத்த ஆறு பின்னணி என்ன?


தென்கொரியாவில் ஓடும் ரத்த ஆறு பின்னணி என்ன?
x
தினத்தந்தி 14 Nov 2019 10:00 PM GMT (Updated: 14 Nov 2019 5:22 PM GMT)

ஆசிய நாடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வேகமாக பரவியது.

சியோல், 

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் எதுவும் உயிர் தப்புவதில்லை. ஆனால், இந்த நோய் மனிதர்களுக்கு ஆபத்தானது இல்லை.

இந்த நிலையில் தென்கொரியாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சுமார் 47 ஆயிரம் பன்றிகளை அந்த நாட்டு அதிகாரிகள் கொன்று குவித்தனர். கொல்லப்பட்ட பன்றிகளின் உடல்களை வடகொரியாவில் எல்லையையொட்டி இருக்கும் ராணுவமயமாக்கப்பட்ட பகுதியில் ஓடும் இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இம்ஜின் ஆற்றங்கரையோர பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பன்றிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளில் மழை நீரில் மணல் கரைந்து, பன்றிகளின் ரத்தம் வழிந்தோடி இம்ஜின் ஆற்றில் கலந்தது.

இதனால் ஆறு முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது. ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட காரணமாக அமையும் என்று கவலை எழுந்துள்ளது. ஆனால் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டதாகவும், எனவே மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் ஆற்றில் ரத்தம் கலக்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் கூறினர்.

Next Story