கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி


கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
x
தினத்தந்தி 18 Nov 2019 8:24 AM GMT (Updated: 18 Nov 2019 8:24 AM GMT)

கலிபோர்னியாவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர்.

சாக்ரமெண்டோ,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரெஸ்னோ என்ற நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பலர் விருந்து நிகழ்ச்சிக்காக கூடியிருந்தனர்.

அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்து ஓடத் துவங்கினர். 

தொடர்ந்து அந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த இரு நபர்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக பிரெஸ்னோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story