மெக்சிகோ: 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 11 பேர் பலி - 25 பேர் பலத்த காயம்
மெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலையில் 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
* சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட தென்கொரியாவுக்கு சொந்தமான 3 கப்பல்களை செங்கடல் அருகே ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். கப்பல்களில் இருந்த 16 பேரை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
* மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மாலி மற்றும் நைஜர் நாடுகளின் ராணுவ படைகள் இணைந்து தங்கள் நாடுகளின் எல்லை பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாலி நாட்டு வீரர்கள் 24 பேர் பலியானார்கள். மேலும் 30 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
* மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டி மற்றும் பச்சுவ்கா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் 3 பஸ்கள் அடுத்தடுத்து, ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
* ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து, ராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் தலீபான் தளபதி ஒருவர் உள்பட 14 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களது ஆயுதகிடங்குகள், பதுங்குகுழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.
Related Tags :
Next Story