போராட்டத்தில் நீடிக்கும் வன்முறை: ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது


போராட்டத்தில் நீடிக்கும் வன்முறை: ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை - நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
x
தினத்தந்தி 20 Nov 2019 10:45 PM GMT (Updated: 20 Nov 2019 10:45 PM GMT)

ஹாங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

பீஜிங்,

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது.

ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹாங்காங்கில் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹாங்காங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த மே மாதம், கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதா ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜனநாயக ஆர்வலர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்பப்பெற்றது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.

சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

தொடர்ந்து 6 மாதங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்த போராட்டம் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா, ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறது. போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசை அமெரிக்கா ஏற்கனவே கண்டித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஹாங்காங் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

இதில் முதல் மசோதா ஹாங்காங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும்.

அதே போல் “ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்ட மசோதா ஹாங்காங் போலீஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும்.

அத்துடன் இந்த மசோதா, ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும்.

இதற்கிடையே ஹாங்காங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவுக்கான அமெரிக்கா தூதருக்கு சீன வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.


Next Story