சியாச்சினில் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியா திட்டம்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு


சியாச்சினில் சுற்றுலாவை மேம்படுத்த இந்தியா திட்டம்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 22 Nov 2019 2:16 AM GMT (Updated: 22 Nov 2019 2:16 AM GMT)

சியாச்சின் பகுதியை சுற்றுலாவுக்கு அனுமதிக்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்,

உலகின் மிக உயரமான போா்க்களமான சியாச்சினில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சியாச்சின் அடிவார முகாம் முதல் குமாா் சாவடி வரை சுற்றுலாப் பயணிகள் சென்று வரலாம்.

கரடுமுரடனான மலைப் பிரதேசத்திலும், மோசமான வானிலையிலும் நமது ராணுவ வீரா்கள் மற்றும் பொறியாளா்கள் நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றுவதை பொதுமக்கள் நேரில் பாா்த்து அறிந்து கொள்ளும் வகையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்தார்.

இந்நிலையில் இஸ்லாமாபாதில் நேற்று செய்தியாளா்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் முகமது  பைசலிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முகம்மது பைசல், கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ சியாச்சின் பகுதியை இந்தியா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. எனவே, அது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைக்குரிய இடம். அப்படி இருக்கும்போது அங்கு சுற்றுலாவுக்கு அனுமதி அளிப்போம் என்று இந்தியா எப்படி கூற முடியும். இதனை பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.


Next Story