அமெரிக்க அதிபர் டிரம்புடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு


அமெரிக்க அதிபர் டிரம்புடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 22 Nov 2019 4:44 AM GMT (Updated: 22 Nov 2019 4:44 AM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இஸ்லாமாபாத்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியுள்ளார்.  இந்த சந்திப்பின் போது,  ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை, காஷ்மீர் விவகாரம் உள்பட பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பணையக்கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டது  மகிழ்ச்சி அளிப்பதாக, டிரம்பிடம் தெரிவித்த இம்ரான் கான், ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில், இது நேர்மறையான முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலின் போது, காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் குறித்தும் டிரம்பிடம் இம்ரான் கான் எடுத்துரைத்ததாகவும், காஷ்மீர் பிரச்சினையில் சுமூகமாக தீர்வு காண அமெரிக்க அதிபர், தனது முயற்சிகளை தொடர வேண்டும் என்றும் இம்ரான் கான் டிரம்பிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கடுமையாக எதிர்த்து வரும் பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், சர்வதேச நாடுகளின் ஆதரவு கிட்டாமல் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என்று இந்தியா உறுதிபட கூறி வரும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் அவ்வப்போது கூறி வருவது  நினைவிருக்கலாம். 

Next Story