ஹாங்காங் உள்ளாட்சி தேர்தல்: ஜனநாயக ஆதரவாளர்கள் வெற்றி முகம்


ஹாங்காங் உள்ளாட்சி தேர்தல்:  ஜனநாயக ஆதரவாளர்கள் வெற்றி முகம்
x
தினத்தந்தி 25 Nov 2019 4:51 AM GMT (Updated: 25 Nov 2019 5:08 AM GMT)

ஹாங்காங் உள்ளாட்சி தேர்தலில் 2015-ம் ஆண்டை விட வாக்கு சதவீதம் அதிகரித்து இருந்தது.

ஹாங்காங், 

போராட்டம் மற்றும் வன்முறையால் நிலைகுலைந்துள்ள ஹாங்காங்கில் நேற்றுமுன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஹாங்காங்கை  பொறுத்தவரையில் மாவட்ட கவுன்சில்களுக்கு மிகக்குறைவான அதிகாரமே இருப்பதால் அந்த தேர்தலுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது.

ஆனால் தற்போதைய உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகியிருக்கிறது. ஏனெனில் இந்த தேர்தல் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் ஆதரவிற்கான ஒரு சோதனையாக  கருதப்படுகிறது. அதாவது 6 மாதங்களாக அரசு எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போதைய அரசுக்கு மக்களிடம் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை இந்த தேர்தல் காட்டும்.

ஹாங்காங்கின் 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட கவுன்சில் இடங்களுக்கு 1,090 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஹாங்காங்கின் ஒட்டு மொத்த மக்கள் தொகையான 70 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 40 லட்சத்து 10 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக ஹாங்காங் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

போராட்டம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள் என்று கருதப்பட்ட நிலையில் அதற்கு நேர்மாறாக நடந்தது. காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதனால் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை விட தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகின. மாலை 4.30 மணிக்கு 20 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 2015-ம் ஆண்டில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளை விட கூடுதலாகும். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், ஜனநாயக ஆதரவாளர்கள் வெற்றி முகம் கண்டுள்ளனர். சீனாவுக்கு ஆதரவான ஆட்சியாளர்கள் கட்சி படுதோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Next Story