நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம்


நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகள் தாமதம்
x
தினத்தந்தி 25 Nov 2019 6:20 AM GMT (Updated: 25 Nov 2019 6:20 AM GMT)

நேபாளத்தில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காத்மாண்டு,

நேபாளத்தில் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், வரும் டிசம்பர் 1 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தசரத் சர்வதேச விளையாட்டு மைதானத்தில்  இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதில் தெற்காசிய நாடுகளான நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

விளையாட்டுப் போட்டிகள் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன. உள்விளையாட்டு அரங்கத்தின் மேற்கூரைகள் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை.

குறிப்பாக நீச்சல் குளத்தில் கட்டுமான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. கட்டுமானம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு தான் குளத்தில் நீர் நிரப்பும் பணி துவங்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் மைதானத்தை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கட்டுமான பொறுப்பாளர் சஞ்ஜீவ் குமார் கூறுகையில், “இந்த பணிக்கான ஒப்பந்தம் ஏழு மாதத்திற்கு முன்பு தான் உறுதி செய்யப்பட்டது.

ஏழு மாத காலத்திற்குள் இவ்வளவு பணிகள் முடிந்திருக்கிறது. இதை தாமதம் என்று கூற முடியாது. தற்போது 85 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும்” என்று கூறினார்.

Next Story