அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி - புயல் எச்சரிக்கையை மீறியதுதான் காரணமா?


அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி - புயல் எச்சரிக்கையை மீறியதுதான் காரணமா?
x
தினத்தந்தி 1 Dec 2019 7:01 AM GMT (Updated: 1 Dec 2019 10:44 PM GMT)

அமெரிக்காவில் நடந்த விமான விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் தற்போது மோசமான வானிலை நிலவுகிறது. அந்த மாகாணத்தில் குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி மாகாண அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்துக்கு சாதகமில்லாத சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் தெற்கு டகோட்டாவில் சேம்பர்லைன் விமான நிலையத்தில் இருந்து, ஒற்றை என்ஜின் கொண்ட ‘பிலாட்ஸ் பிசி 12’ ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலை புறப்பட்டு சென்றது.

வடமேற்கு மாகாணமான இடஹோ நோக்கி சென்ற இந்த விமானத்தில் விமானி உள்பட 12 பேர் இருந்தனர். புறப்பட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சேம்பர்லைன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் விமானி மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோசமான வானிலைக்கு மத்தியிலும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயம் அடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவரவில்லை. மோசமான வானிலையாலேயே விபத்து நேரிட்டு இருக்கும் என கருதப்படுகிறது. எனினும் இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story