கர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த கணவன்


கர்ப்பிணி மனைவிக்கு தனது முதுகையே நாற்காலியாக தந்த  கணவன்
x
தினத்தந்தி 9 Dec 2019 5:58 AM GMT (Updated: 9 Dec 2019 5:58 AM GMT)

கணவன்-மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹீலோங்ஜியாங்,

சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளனர் ஒரு தம்பதியர். மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளனர் தம்பதியர்.

மருத்துவமனையில் அதிக கூட்டம் காணப்பட்டது.  உட்கார கூட முடியாத அளவிற்கு நாற்காலிகள் முழுவதும் நிரம்பி வழிந்தன. கர்ப்பிணியாக இருந்த அப்பெண் வந்து நீண்ட நேரமாகியும், நாற்காலியில் உட்கார இடம் கிடைக்காததால் அவதியடைந்தார். அவரது நிலையை பார்த்த நாற்காலியில் அமர்ந்திருந்த யாரும் எழுந்து நின்று இடம் கொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் அந்த கர்ப்பிணி பெண் கடும் கால் வலியால் அவதிப்பட்டார். தன் மனைவியின் நிலை கண்டு பொறுக்கமுடியாத அந்த கணவர் சட்டென்று தரையில் முட்டிப்போட்டு தனது முதுகில் உட்கார சொன்னார்.

இதற்கு மேல் வேறு வழியில்லை என்ற நிலையில் தனது கணவரது முதுகில் உட்கார்ந்து கொண்டார் அந்த கர்ப்பிணி பெண். மனைவியின் துயர்துடைக்க தனது முதுகையே நாற்காலியாக தந்த கணவரின் செயல் அங்கிருந்த கேமராவில் பதிவானது. இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story