சிலியில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது - 38 பேரின் கதி என்ன?


சிலியில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது - 38 பேரின் கதி என்ன?
x
தினத்தந்தி 10 Dec 2019 8:14 AM GMT (Updated: 10 Dec 2019 10:57 PM GMT)

சிலியில் 38 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

சாண்டியாகோ,

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் பூண்டா அரிநாஸ் நகரில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள அந்த நாட்டின் விமானப்படை தளத்துக்கு ‘ஹெர்குலிஸ் சி 130’ ரக ராணுவ விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.

உள்ளூர் நேரப்படி மாலை 4.53 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில் 21 விமானப்படை ஊழியர்களும், விமான ஊழியர்கள் 17 பேரும் இருந்தனர். இவர்கள் அண்டார்டிகா விமானப்படை தளத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்றனர்.

புறப்பட்டு சென்ற சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானம் மாயமானதாக அறிவித்த அந்த நாட்டின் விமானப்படை உடனடியாக தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது.

இந்த விமானம் கடைசியாக அண்டார்டிகா விமானப்படை தளத்தில் இருந்து 280 கடல் மைல் தொலைவில் இருந்ததாக விமானப்படை கூறியது.

அதனை தொடர்ந்து இந்த தேடுதல் வேட்டையில் விமானப்படையுடன் அந்த நாட்டின் கடற்படை கைகோர்த்தது. மீட்பு விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன.

சுமார் 7 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மாயமான விமானம் விபத்துக்குள்ளானதாக அந்த நாட்டு விமானப்படை நேற்று காலை அறிவித்தது.

இது தொடர்பாக விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து, அதனால் விபத்து நேரிட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும் விமானத்தில் பயணம் செய்த 38 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் அதிபர் செபஸ்டியான் பினேரா, விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த கவலையை அளித்துள்ளது என்றும், விமானப்படை தலைமை அலுவலகத்தில் இருந்து நிலைமைகளை உடனுக்குடன் தான் கண்காணித்து வருவதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Next Story