அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை


அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை
x
தினத்தந்தி 13 Dec 2019 11:15 PM GMT (Updated: 13 Dec 2019 9:17 PM GMT)

அமெரிக்கா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.

வாஷிங்டன்,

அமெரிக்கா- சோவியத் ரஷியா இடையே பனிப்போர் காலத்தில் 1987-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படுகிற குறுகிய மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகளை சோதிக்க தடை விதித்தது. ரஷியா இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏவுகணைகளை சோதிப்பதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் ரஷியா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.

ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய சில நாட்களிலேயே தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணை ஒன்றை அமெரிக்கா சோதித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும் செயல்” என கூறி ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் தரையில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர ஏவுகணையை அமெரிக்கா நேற்று முன்தினம் மீண்டும் சோதித்தது. கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வான்டென்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை 500 கி.மீ தொலைவுக்கு பறந்து, பின்னர் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

மேலும், “சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் இந்த சோதனையில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையின் எதிர்கால திறன்களை மேம்படுத்தும்” என பென்டகன் செய்தி தொடர்பாளர் ராபர்ட் கார்வெர் கூறினார்.

Next Story