இத்தாலியில் 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு - 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்


இத்தாலியில் 2-ம் உலகப்போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு - 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்
x
தினத்தந்தி 16 Dec 2019 11:30 PM GMT (Updated: 16 Dec 2019 10:47 PM GMT)

இத்தாலியில் 2-ம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதற்காக 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

ரோம்,

இத்தாலியின் தெற்கு பகுதியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரம் பிரிந்தி. இங்குள்ள தியேட்டர் ஒன்றை புனரமைக்கும் பணிகள் அண்மையில் நடந்தது.

அப்போது அங்கு கட்டுமான பணிக்காக குழி தோண்டியபோது வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அது, 2-ம் உலகப்போரின் போது 1941-ம் ஆண்டு இத்தாலி மீது இங்கிலாந்து வீசிய வெடிகுண்டு என தெரியவந்தது.

இதையடுத்து, 1 மீட்டர் நீளமும், 200 கிலோ எடையையும் கொண்ட அந்த வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்க வைக்கும் தீவிர முயற்சி யில் இத்தாலி ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் சுமார் 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 1,000 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 250-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

அதுமட்டும் இன்றி பிரிந்தி நகரில் உள்ள உள்ளூர் விமான நிலையம், ரெயில் நிலையம், 2 மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலை ஆகியவை பாதுகாப்பு கருதி மூடப்பட்டன.

சிறையில் இருந்த 200-க்கும் அதிகமான கைதிகள் 35 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து, மூத்த ராணுவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் திட்டமிட்டப்படி ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.

முன்னதாக கடந்த 1-ந்தேதி இத்தாலியின் துரின் நகரில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதும், சுமார் 10 ஆயிரம் மக்களை வெளியேற்றிவிட்டு ராணுவவீரர்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story