டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்


டொனால்டு டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை கண்டனத் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Dec 2019 12:31 PM GMT (Updated: 17 Dec 2019 1:17 PM GMT)

நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்திற்கு ஆளாகும் 3 ஆவது ஜனாதிபதி என்ற அவப்பெயருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆளாகி உள்ளார், ஆனாலும் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்படாது என்பது உறுதியாகி உள்ளது.

வாஷிங்டன்

அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்பின் முக்கிய எதிர் வேட்பாளர் என கருதப்படுபவர் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன். அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான இவரது மகன் உக்ரேன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு பற்றி விசாரணை நடத்துமாறு உக்ரேன் அதிபர் விளாடிமர் ஜெலன்ஸ்கிடம் கடந்த ஜூலை மாதம் டிரம்ப் தொலைபேசி வாயிலாக கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றுக்கு டிரம்ப் ஆபத்து விளைவித்து விட்டார் என்று ஜனயநாயக கட்சி குற்றம் சாட்டியது.

இதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அவர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு, முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் நாளை  அது தாக்கல் செய்யப்படுகிறது.

பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சிக்கு 236 பேர் உள்ளனர். டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 197 பேர் மட்டுமே உள்ளனர், எனவே கண்டனத் தீர்மானம் அங்கு நிறைவேறுவது உறுதியாகி உள்ளது. கண்டனத் தீர்மானம் செனட் சபையிலும் நிறைவேறினால் மட்டுமே, அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்க முடியும்.

ஆனால் 100 இடங்களைக் கொண்ட செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களுடன் பெரும்பான்மை இருப்பதால் கண்டனத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, டிரம்பின் பதவி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். டிரம்பிற்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் 1974 ஆம் ஆண்டு வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தில் அதிபர் ரிச்சர்டு நிக்சன் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படும் சூழலில் அவர் தாமாகவே பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

1868 ஆம் ஆண்டு ஆன்ட்ரூ ஜான்சன் மீதும், 1998 ல் பில் கிளின்டன் மீதும் கண்டனத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் அவை செனட்டில் தோற்கடிக்கப்பட்டன. இதனிடையே தம் மீதான குற்றச்சாட்டு வெறும் புரளியும், பொய்யானதும் ஆகும் என அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார். கடந்த அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்ததற்காக ஜனநாயக கட்சி அரசியல் ரீதியாக தம்மை பழிவாங்க முயற்சிக்கிறது என்பது டிரம்பின் குற்றச்சாட்டு.

Next Story