குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது ஏன்? -மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது ஏன்? -மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 18 Dec 2019 7:11 AM GMT (Updated: 18 Dec 2019 7:11 AM GMT)

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து உள்ளார்.

நியூயார்க்,

இந்தியா-அமெரிக்கா இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நாளை நடக்கிறது. இதற்காக அங்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நியூயார்க்கில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை சட்ட  திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சமடைந்த இந்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதில், அந்நாட்டு முஸ்லிம்கள் சேர்க்கப்படாததற்கு காரணம், மேற்கூறிய 3 நாடுகளுமே முஸ்லிம் நாடுகளாகும். இஸ்லாமை பின்பற்றும் அந்நாடுகளில் முஸ்லிம்கள் மத ரீதியான பாதிப்புக்கு ஆளாக மாட்டார்கள். எனவேதான், அந்நாட்டு முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. மற்றபடி, நாங்கள் சாதி, இனம், மதத்தால் பாகுபாடு பார்ப்பவர்கள் அல்ல.

நம் கலாச்சாரம் நமக்கு வெறுப்பை கற்றுத்தரவில்லை. இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை எனது சகோதரர்களாகவும், குடும்ப உறுப்பினராகவும்தான் கருதுகிறோம். தற்போது அசாம், மேற்கு வங்கத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் உள்ள அனைத்து குழப்பங்களும் தீர்க்கப்படும். குடியுரிமை சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது என யாராவது நிரூபித்தால் அதைப் பற்றி நாங்கள் மறுபரிசீலனை செய்ய தயார். ஆனால், இந்த விஷயத்தில் வெறும் குழப்பத்தை ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என கூறினார்.

Next Story