ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி


ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி
x
தினத்தந்தி 22 Dec 2019 11:30 PM GMT (Updated: 22 Dec 2019 10:42 PM GMT)

ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இது அந்த நாட்டு அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டு அதிபர் அஷ்ரப் கனி தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.

இதற்கிடையே அஷ்ரப் கனியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி கடந்த மார்ச் மாதமே அங்கு அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த தேர்தல் ஜூலை 28-ந் தேதிக்கும் அதன் பின்னர் மீண்டும் செப்டம்பர் 28-ந் தேதிக்கும் என 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலை சீர் குலைப்போம் என பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததால் மக்கள் பலர் உயிருக்கு பயந்து ஓட்டு போடுவதை தவிர்த்தனர்.

இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின. அதே சமயம் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது.

அக்டோபர் முதல் வாரத்திலேயே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் தாமதம் ஏற்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதே தாமதத்துக்கு காரணம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

அதே சமயம் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதும் வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்தியது. தேர்தல் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வந்தது.

இந்தநிலையில் தேர்தல் நடந்து முடிந்து 3 மாதங்களுக்கு பிறகு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அதிபர் அஷ்ரப் கனி 50.64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் அஷ்ரப் கனி தொடர்ந்து 2-வது முறையாக ஆப்கானிஸ்தான் அதிபராகி இருக்கிறார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அஷ்ரப் கனியை எதிர்த்து போட்டியிட்ட ஆப்கானிஸ்தான் தேசிய கூட்டணி கட்சியின் தலைவர் அப்துல்லா 39.52 சதவீத வாக்குளை மட்டுமே பெற்று வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

எனினும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என அப்துல்லா தெரிவித்துள்ளார். அவர் இந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து கோர்ட்டில் மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 சதவீத வாக்குளை பெற்றால் வெற்றி என்கிற நிலையில் அஷ்ரப் கனி 50.64 சதவீத வாக்குகளை பெற்று நூலிழையில் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒருவேளை இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளர்கள் இருவருமே 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குளை பெற்றிருந்தால் அவர்கள் 2-வது கட்ட தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி இருக்கும். ஆனால் தற்போது அதற்கு அவசியம் இல்லை.


Next Story