ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலி: 80 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு


ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலி: 80 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 25 Dec 2019 9:54 PM GMT (Updated: 25 Dec 2019 9:54 PM GMT)

ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலியாகினர். மேலும் இந்த சம்பவத்தில் 80 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

வாகடூகு,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சோம் மாகாணத்தில் அர்பிந்தா நகரில் உள்ள ராணுவ தளம் மற்றும் அதன் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் 100 பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 31 பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் 35 பேர் பலியாகினர். மேலும் ராணுவவீரர்கள் 7 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து, விமானப்படை உதவியுடன் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் ரோச் மார்க், நாட்டில் 2 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Next Story