ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2020 10:52 PM GMT (Updated: 12 Jan 2020 10:52 PM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாயினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தலீபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தலீபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் தெற்கு பகுதியில் காந்தஹார் மாகாணத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலைக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது. இதில் அமெரிக்க வீரர்கள் பயணித்த வாகனம் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பு ஏற்றது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு சுமார் 2,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story