சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்தது: 6 பேர் பலி


சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்தது: 6 பேர் பலி
x
தினத்தந்தி 14 Jan 2020 10:39 PM GMT (Updated: 14 Jan 2020 10:39 PM GMT)

சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.

பீஜிங்,

சீனாவில் கிங்காய் மாகாணத்தின் தலைநகரான ஜினிங்கில் செஞ்சிலுவை சங்க ஆஸ்பத்திரி உள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு வெளியே ஒரு பஸ் நிறுத்தமும் உள்ளது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணிக்கு, அந்த பஸ் நிறுத்தம் அருகே ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையில் திடீரென ஒரு புதைகுழி உருவானது. அதில் அந்த பஸ் விழுந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.

பஸ் மட்டுமின்றி, அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் சிலரும்கூட அந்த புதைகுழிக்குள் விழுந்தனர். பஸ் விழுந்ததைத் தொடர்ந்து அந்த புதைகுழிக்குள் ஒரு வெடிப்பும் நிகழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 16 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

2016-ம் ஆண்டு இதே போன்று சாலையில் ஏற்பட்ட ஒரு புதைகுழியில் 3 பேர் விழுந்து பலியானதும், அதற்கு முன்பாக 2013-ம் ஆண்டு, 10 மீட்டர் அகலத்தில் உருவான புதைகுழியில் விழுந்து 5 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.


Next Story