“இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து


“இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது” - ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி நாதெள்ளா கருத்து
x
தினத்தந்தி 14 Jan 2020 11:30 PM GMT (Updated: 14 Jan 2020 10:57 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.

நியூயார்க்,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தவருக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம், மத ரீதியில் பாரபட்சத்தை கொண்டுள்ளதாக கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.

இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் நியூயார்க் நகரில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் நேற்று நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு மத்தியில், அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்தியருமான சத்ய நாதெள்ளா (வயது 52), பத்திரிகை ஆசிரியர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய கருத்தை தெரிவிக்குமாறு கேட்டனர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

இந்தியாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது வருத்தம் அளிக்கிறது. நான் வெளிப்படையாக இந்தியாவில்தான் வளர்ந்தேன். அங்கிருந்துதான் நான் என் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பெற்றேன். நான் வளர்ந்த நகரம், வளர்வதற்கு ஒரு சிறந்த நகரம் என்று எப்போதும் நான் உணர்கிறேன். நாங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், தீபாவளி பண்டிகையையும் கொண்டாடி இருக்கிறோம்.

ஆனால் இப்போது இந்தியாவில் நடப்பது வருத்தம் அளிக்கிறது.

உண்மையிலேயே அங்கு நடந்து கொண்டிருப்பது பற்றி வெளிப்படையான தகவல்கள் அளிக்கப்படுகின்றன. 2 அற்புதமான அமெரிக்க விஷயங்களால் நான் உருவானேன். ஒன்று தொழில்நுட்பம். மற்றொன்று, வளர்ந்து வரும் இடத்தையும், அதன் குடியேற்ற கொள்கையையும், இது போன்ற ஒரு நாட்டில் என்னுடையது என்பது போன்ற ஒரு உணர்வும் என்னை வந்தடைகிறது. ஆனால் இந்தியாவில் நடப்பது மோசமானது.

இந்தியாவுக்கு செல்கிற வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர், இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்குபவராகவோ அல்லது இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவோ வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் எனது இந்திய பாரம்பரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளேன். பன்முக கலாசாரம் கொண்ட இந்தியாவில் வளர்ந்தேன்.

இந்தியா மீதான எனது நம்பிக்கை என்னவென்றால், அங்கு குடியேறிச்செல்கிற ஒருவர் வளமான ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்க வேண்டும் அல்லது பன்னாட்டு நிறுவனத்துக்கு தலைமை தாங்க வேண்டும். அது இந்திய சமூகத்துக்கு, பொருளாதாரத்துக்கு பெருமளவில் பலன் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story