அரசியல் கட்சி தொண்டர்கள் 86 பேருக்கு 55 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு


அரசியல் கட்சி தொண்டர்கள் 86 பேருக்கு 55 ஆண்டுகள் சிறை: பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Jan 2020 8:00 PM GMT (Updated: 17 Jan 2020 7:51 PM GMT)

அரசியல் கட்சி தொண்டர்கள் 86 பேருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் 2010-ம் ஆண்டு பீபி (வயது 47) என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு இஸ்லாமை அவமதித்ததாக கூறப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் தனிமை சிறையில் கழித்த அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் 2018-ம் ஆண்டு தெஹ்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் (டி.எல்.பி.) என்ற கட்சித் தலைவர் காதிம் உசேன் ரிஸ்வி 3 நாள் போராட்டம் நடத்தினார். அப்போது வன்முறை நடந்ததால் காதிம் உசேன் கைது செய்யப்பட்டார்.

டி.எல்.பி. கட்சித் தலைவர் கைதை கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டு போலீசாரும் தாக்கப்பட்டனர். இதுதொடர்பாக காதிம் உசேனின் சகோதரர் அமீர் உசேன் ரிஸ்வி, மருமகன் முகம்மது அலி உள்பட 86 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான கோர்ட்டு விசாரணை நடத்தி 86 பேருக்கும் தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story