பராகுவே நாட்டில் சிறைச்சாலைக்குள் இருந்து சுரங்கம் அமைத்து தப்பிச் சென்ற 76 கைதிகள்


பராகுவே நாட்டில் சிறைச்சாலைக்குள் இருந்து சுரங்கம் அமைத்து தப்பிச் சென்ற 76 கைதிகள்
x
தினத்தந்தி 20 Jan 2020 3:25 PM GMT (Updated: 20 Jan 2020 3:25 PM GMT)

பராகுவே நாட்டில் உள்ள சிறைச்சாலைக்குள் இருந்து 76 கைதிகள் சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்றனர்.

அசுன்சியோன்,

தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது. அந்த சிறைச்சாலையில் உள்நாடு மற்றும் அண்டை நாடான பிரேசில் ஆகியவற்றில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறைச்சாலைக்குள்ளேயே சுரங்கம் அமைத்து கைதிகள் 76 பேர் (40 பிரேசில் நாட்டினர், 36 பராகுவே நாட்டினர்) தப்பிச்சென்றுள்ளனர். கைதிகள் தாங்கள் அமைத்த சுரங்கத்தில் எடுத்த மணலை மூட்டைகளாக கட்டி சிறையில் உள்ள ஒரு அறைக்குள் மறைத்து வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

தப்பிச்சென்ற கைதிகள் அனைவரும் பிரேசில் மற்றும் பராகுவே நாட்டில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட மிகவும் அபாயகரமானவர்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறை கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம் செய்யப்படுள்ளார். சிறைக்காவலர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் கைதிகள் சிறையில் இருந்து தப்பிச்சென்றது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

Next Story