மர்ம வைரஸ் காய்ச்சல் பரவுவதால் சீனாவில் பீதி: முக கவசத்துடன் மக்கள் நடமாட்டம்


மர்ம வைரஸ் காய்ச்சல் பரவுவதால் சீனாவில் பீதி: முக கவசத்துடன் மக்கள் நடமாட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2020 11:30 PM GMT (Updated: 20 Jan 2020 10:00 PM GMT)

சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. அவர்கள் முக கவசத்துடன் நடமாடி வருகிறார்கள். 1,700 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

பீஜிங்,

‘கொரனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் மத்திய நகரான வுகானில் இந்த மர்ம வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. அங்கு ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகிறார்கள்.

இந்த காய்ச்சல் தாக்கியவர்கள், கடுமையான சுவாசப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இதுவரை 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. வுகான் நகரில், 170 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அவர்களுடன் சேர்த்து, சீனா முழுவதும் 201 பேருக்கு வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வ எண்ணிக்கையாக இருந்தபோதிலும், வுகான் நகரில் மட்டும் 1,700 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் உலக தொற்றுநோய் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வுகான் நகரில் உறவினர் களை பார்த்து விட்டு திரும்பிய பிற நகரங்களை சேர்ந்தவர்களுக்கும் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளது.

மேலும், வுகான் நகருக்கு வந்து விட்டு திரும்பிய தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுபோல், வுகான் நகருக்கு வந்து விட்டு திரும்பிய தென்கொரியாவை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல், நோய் வேகமாக பரவி வருவதால், சீனா முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நோய், ஏதோ ஒரு விலங்கு மூலம் பரவியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், மனிதர்களுக்கு ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று வுகான் நகர சுகாதார ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து நடமாடி வருகிறார் கள். ஆஸ்பத்திரிகளில், உடலை முழுமையாக மூடக்கூடிய விசேஷ உடைகளை அணிந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவது டெலிவிஷன் காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

வுகான் நகரில் விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்பநிலையை அளவிட தெர்மாமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருப்பவர்கள், முக கவசம் அணிவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சீனாவில் இருந்து வரும் பயணிகளை நகர எல்லையிலேயே பரிசோதித்து அனுமதிக்க ஹாங்காங் ஏற்பாடு செய்துள்ளது. தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் சில விமான நிலையங்களில் நோய் பரிசோதனை வசதியை உருவாக்கி உள்ளன.

சீனாவில், இந்த வார இறுதியில், நிலாவை அடிப்படையாக கொண்ட புத்தாண்டு பிறக்கிறது. அதையொட்டி, கோடிக்கணக்கான சீன மக்கள், நாடு முழுவதும் பயணம் செய்து உறவினர்களை சந்திப்பது வழக்கம். அதனால், மர்ம வைரஸ் காய்ச்சல் மேலும் பெரிய அளவில் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2002, 2003-ம் ஆண்டுகளில் சீனா, ஹாங்காங் ஆகியவற்றில் ‘சார்ஸ்‘ என்ற வைரஸ் தாக்கியது. அதில், சுமார் 650 பேர் பலியானார்கள். அதேபோன்ற வைரஸ் காய்ச்சலாக இது கருதப்படுவதால், கடும் பீதி ஏற்பட்டுள்ளது.


Next Story