சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 4வது நபர் பலி


சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 4வது நபர் பலி
x
தினத்தந்தி 21 Jan 2020 3:04 AM GMT (Updated: 21 Jan 2020 3:20 AM GMT)

சீனாவில் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

பெய்ஜிங்,

சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் அங்கு 650 பேர் வரை பலியாகினர்.  இதேபோன்று, கனடாவில் 44 பேரும், தைவானில் 37 பேரும், சிங்கப்பூரில் 33 பேரும், வியட்னாமில் 5 பேரும், அமெரிக்காவில் 4 பேரும், பிலிப்பைன்சில் 2 பேரும் சார்ஸ் நோய் தாக்குதலில் பலியாகினர்.  5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நோய் பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது.

வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மனிதர்களில் மரணம் விளைவிக்கும்.  இந்த நிலையில், சீனாவில் சார்ஸ் வைரசுடன் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது.

சீன தலைநகர் பெய்ஜிங்கிலும் வைரஸ் பாதிப்பு பரவியது.  இந்த வைரசானது சீனாவின் மத்திய நகரான வூஹானில் முதலில் கண்டறியப்பட்டது.  வூஹான் நகரில் மொத்தம் 1.1 கோடி பேர் வசித்து வருகின்றனர்.  அவர்களில் இந்த வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி உள்ளது.  இதனையடுத்து 170 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வூஹான் நகர சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், வைரஸ் தாக்குதலுக்கு 89 வயது நிறைந்த 4வது நபர் பலியாகி உள்ளார் என தெரிவித்து உள்ளது.  இந்த வைரஸ் வூஹானில் 200 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

Next Story