கனடாவில் தமிழக மாணவிக்கு கத்திக்குத்து: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


கனடாவில் தமிழக மாணவிக்கு கத்திக்குத்து: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 24 Jan 2020 8:40 PM GMT (Updated: 24 Jan 2020 8:40 PM GMT)

கனடாவில் தமிழக மாணவி ஒருவர் மீது நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஆஸ்பத்திரியில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

டோரண்டோ,

நீலகிரி மாவட்டத்தின் குன்னூரை சேர்ந்த ஆல்பர்ட் என்பவரின் மகள் ரேச்சல் (வயது 23). இவர் கனடாவின் டோரண்டோவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 22-ந் தேதி அந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் ரேச்சலை வழிமறித்து கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு, அவரது கைப்பையையும் எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ரேச்சல், சன்னிபுரூக் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக டோரண்டோ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேச்சல் கத்திக்குத்துக்கு ஆளான தகவல் அறிந்து அவரது பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். ரேச்சலை பார்ப்பதற்காக அவர்கள் விரைவில் கனடா செல்ல உள்ளனர். பல்கலைக்கழகத்தில் ரேச்சலுக்கு சக மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாக ஆல்பர்ட் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையே ரேச்சலுக்கு நடந்த துயர சம்பவத்தை அவரது உறவினர் ஒருவர் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு டுவிட்டர் மூலம் தெரிவித்தார். இதை அறிந்து கடும் அதிர்ச்சி வெளியிட்ட அவர், இளம்பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Next Story