கொடிய கொரோனா வைரஸ் ஐரோப்பியாவையும் தாக்கியது 3 பேர் பாதிப்பு
சீனாவில் தாண்டவமாடும் கொடிய கொரோனா வைரஸ் ஐரோப்பியாவையும் தாக்கி உள்ளது. அங்கு 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாரீஸ்
சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.
முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேர் பலியாகி உள்ளனர் என வுகான் நகர சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர். ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ரெயில்வே நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. வுகான் நகர குடியிருப்புவாசிகள் வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சீனாவில் நேற்று வரை வைரஸ் காய்ச்சலுக்கு 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள்.
தற்போது இந்த கொடிய கொரோனா வைரஸ் ஐரோப்பாவையும் தாக்கியுள்ளது, பிரான்சில் 3 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் முதன்முதலில் இந்த பாதிப்பு குறித்து தகவல் வெளிவந்ததிலிருந்து வுகானில் இருந்து 2,000 பேர் பிரிட்டனுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நோயால் இப்போது உலகளவில் 1,300 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோயாளிகளுக்கு 'ஸ்பேஸ்மேன் சூட்களில்' மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பிரான்சில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகள் தலைநகர் பாரிஸில் இருக்கும் மருத்துவமனையில் இருப்பதாகவும், மற்றொரு நபர் போர்டியாக்சில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் சுகாதார துறை அமைச்சர் ஆக்னஸ் புசின், இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டு பேரின் உறவினரான ஒருவருக்கும் இந்த நோய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூன்று பேரில் ஒரு நோயாளிக்கு 48 வயது இருக்கும் எனவும், அவர் சில தினங்களுக்கு முன்பு தான் சீனாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் ஒரு தனியறையில் வைக்கப்பட்டு, கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வெளியுலகை பார்ப்பதற்கு இப்போதைக்கு அனுமதிக்கப்படவில்லை, ஆனால் அவர் நல்ல நிலையில் இருக்கிறார் என்று ஆக்னஸ் புசின் கூறியுள்ளார்.ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரான்சில் இந்த நோய் அடியெடுத்து வைத்துள்ளதால், அங்கிருக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story