பாகிஸ்தானில் தொடரும் அவலம்: இந்து பெண்ணை கடத்தி கட்டாய மத மாற்றம்


பாகிஸ்தானில் தொடரும் அவலம்: இந்து பெண்ணை கடத்தி கட்டாய மத மாற்றம்
x
தினத்தந்தி 27 Jan 2020 11:34 PM GMT (Updated: 27 Jan 2020 11:34 PM GMT)

பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்து, முஸ்லிம் இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.


இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களாக இருக்கும் இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்து, முஸ்லிம் ஆண்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், 12 முதல் 28 வயதுக்குட்பட்ட சுமார் 1,000 இந்து பெண்கள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று அமெரிக்காவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று தெரிவித்துள்ளது.

அதிலும் சமீபகாலமாக இந்த கட்டாய மதமாற்றம் மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்து மக்கள் அதிகம் வாழும் சிந்து மாகாணத்தில் இருந்து தொடர்ச்சியாக இந்து இளம் பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 14-ந்தேதி சிந்து மாகாணத்தில் உள்ள உமர் கிராமத்தை சேர்ந்த சாந்தி மெக்வாத், சர்மி மெக்வாத் ஆகிய 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர். இது பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த மூத்த அதிகாரியை அழைத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிந்து மாகாணத்தில் திருமணத்தின்போது இந்து இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்குள்ள மாத்திரி மாவட்டத்தை சேர்ந்த பாரதி பாய் (வயது 24) என்ற இளம் பெண்ணுக்கு இந்து இளைஞருடன் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக மணமக்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருமண மண்டபத்தில் இருந்தனர்.

அப்போது மண்டபத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று பாரதி பாயை அங்கிருந்து கடத்தி சென்றது. இது குறித்து பாரதி பாயின் தந்தை கிஷோர் தாஸ் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், சாருக் குல் என்ற இளைஞர் கூலிப்படை ஆட்களுடன் வந்து தனது மகளை கடத்தி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். சில மணி நேரத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் திட்டம் போட்டு கடத்தி சென்றுவிட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில் பாரதி பாய் மதம் மாறியதற்கான சான்றிதழ் மற்றும் அவர் சாருக் குல்லை திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவை இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

மத மாற்ற சான்றிதழில் பாரதி பாய், கடந்த மாதம் 1-ந்தேதியே மதம் மாறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவரது பெயர் புஷ்ரா என மாற்றப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மத மாற்ற சான்றிதழ் போலியானது என்றும், தங்களது மகள் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பாரதி பாயின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் தங்களது மகளை உடனடியாக மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென போலீசாருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story