அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு


அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து 8 பேர் சாவு
x
தினத்தந்தி 28 Jan 2020 10:04 PM GMT (Updated: 28 Jan 2020 10:04 PM GMT)

அமெரிக்காவில் படகு வீடுகளில் தீப்பிடித்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஸ்காட்ஸ்போரோ நகரில் டென்னசி நதி கரையோரம் மரத்திலான படகு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படகு வீடுகளில் பொதுமக்கள் பலர் நிரந்தரமாகவும் சிலர் வார இறுதி நாட்களை கழிக்கும் பொருட்டும் வாடகைக்கு தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு இங்குள்ள ஒரு படகு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக மற்ற படகு வீடுகளுக்கும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இந்த விபத்தில் 35 படகு வீடுகள் எரிந்து ஆற்றில் மூழ்கின. அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதே சமயம் படகு வீடுகளில் இருந்த 7 பேர் ஆற்றில் குதித்து உயிர் தப்பினர். அவர்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Next Story