இங்கிலாந்தில் இந்திய தூதரகம் முன்பு போராட்டம் : இந்தியா விமர்சனம்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை எதிர்த்தும், அங்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் திரண்டு, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி அளித்த இங்கிலாந்து மீது இந்தியா விமர்சனங்களை முன்வைத்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ இந்த விவகாரத்தை இங்கிலாந்து அரசிடம் நாங்கள் எடுத்துச்சென்றுள்ளோம். இது போன்ற சம்பவங்கள் தூதரகத்தின் நடவடிக்கைகளில் சிரமங்களை ஏற்படுத்துகின்றன. வரும் காலங்களில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தொடராது என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story