சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 258 ஆக உயர்வு


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 258 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 Feb 2020 1:42 AM GMT (Updated: 1 Feb 2020 1:42 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 258 ஆக உயர்வடைந்து உள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமுடன் பரவி அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.  வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவியது.

வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேர் பலியாகி உள்ளனர் என வுகான் நகர சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது.  இதனை தொடர்ந்து, வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இதேபோன்று ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது.  ரெயில்வே நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.  வுகான் நகர குடியிருப்புவாசிகள், வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து வைரஸ் தீவிரமுடன் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி சீனாவிலுள்ள சுகாதார ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது.  1,347 பேருக்கு புதிய பாதிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவித்து உள்ளது.

Next Story