கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீனாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் - டிரம்ப் தகவல்


கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீனாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் -  டிரம்ப் தகவல்
x
தினத்தந்தி 5 Feb 2020 6:50 AM GMT (Updated: 5 Feb 2020 11:42 PM GMT)

கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீனாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வா‌ஷிங்டன்,

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் உரையாற்றினார்.

ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நீடித்த உரையில் டிரம்ப், உற்சாக துள்ளலுடன் பேசினார். தனது ஆட்சியில் அமெரிக்காவின் கனவு மீண்டு வந்துவிட்டதாகவும், அமெரிக்கா முன்பை விட வலுவான மற்றும் சிறப்பான நாடாக மாறியிருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில் சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், ஈரான் ராணுவ தளபதி கொலை, ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர், மத்திய கிழக்கு அமைதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:-

அமெரிக்காவின் பொருளாதாரம் சிதைந்த ஆண்டுகள் முடிந்துவிட்டன. மிக குறுகிய காலமான 3 ஆண்டு கால ஆட்சியில் அமெரிக்க பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறப்பானதாக மாறியிருக்கிறது.

வேலைகள் பெருகி வருகின்றன; வருமானங்கள் அதிகரித்து வருகின்றன; வறுமை வீழ்ச்சியடைந்து வருகிறது; குற்றம் குறைந்து வருகிறது; நம்பிக்கை அதிகரித்து வருகிறது; நாடு செழித்து வளர்ந்து வருகிறது; அமெரிக்காவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது.

அமெரிக்கா கற்பனை செய்து பார்க்க முடியாத வேகத்தில் முன்னேறியிருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் கனவு மீண்டு வந்துள்ளது. முன்பை விட அமெரிக்கா வலுவான மற்றும் சிறப்பான நாடாக மாறியிருக்கிறது.

ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி இரக்கமற்ற கசப்பான நபர். பயங்கரவாத்தின் தீய ஆட்சியாக இருந்த அவர் அமெரிக்காவின் துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டதில் எந்த தவறும் இல்லை.

ஈரான் அணு ஆயுதங்களை கைவிடவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். எங்களின் பொருளாதார தடைகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகி இருக்கிறது.

குறுகிய காலத்தில் ஈரானின் பொருளாதாரத்தை அமெரிக்காவால் மீட்டெடுக்க முடியும். இது அவர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் வீண் பெருமிதம் பேசி காலத்தை விணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஈராக் மற்றும் சிரியாவில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் 100 சதவீதம் அளவிற்கு முழுவதுமாக அழிக்கப்பட்டுவிட்டனர். பயங்கரவாத்துக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து போராடும்.

அமெரிக்காவை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளுக்கு ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமெரிக்கா மக்களை நீங்கள் தாக்கினால். அமெரிக்காவின் நீதியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நீடித்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவரும் இறுதிகட்ட பணியில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இதன் முடிவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்புவார்கள்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசுடன் எனது நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்படும். இந்த அச்சுறுத்தலில் இருந்து சீனாவில் உள்ள எங்கள் குடிமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எனது நிர்வாகம் எடுக்கும்.

இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அதே சமயம் அமெரிக்கா தொடர்ந்து புதிய மருத்துவ முன்னேற்றங்களை அடைகிறது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன் என்று டிரம்ப் தனது உரையில் பேசினார்.

உரை குறிப்பை கிழித்த சபாநாயகர்

ஜனாதிபதி டிரம்புக்கும், பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசிக்கும் இடையே பனிப்போர் நிலவிவருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்ற டிரம்ப் வந்தபோது, அவரை வரவேற்கும் விதமாக அவருடன் கை குலுக்க நான்சி பெலோசி கை நீட்டினார். ஆனால் டிரம்ப், கை குலுக்க மறுத்துவிட்டு உரையை தொடங்கினர்.

இதனால் அதிருப்தியில் இருந்த நான்சி பெலோசி, டிரம்ப் தனது உரையை நிறைவு செய்ததும் ஜனாதிபதியின் உரை குறிப்பை, ஒவ்வொன்றாக எடுத்து கிழித்துப்போட்டார்.

பேப்பர் கிழிபடும் சத்தம் கேட்டபோதும், அதை கண்டும் காணாமல், டிரம்ப் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.



Next Story