‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த டாக்டரை நோய் தாக்கியது


‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த டாக்டரை நோய் தாக்கியது
x
தினத்தந்தி 5 Feb 2020 4:29 PM GMT (Updated: 5 Feb 2020 4:29 PM GMT)

சீனாவில் ‘கொரோனா’ வைரசை கண்டுபிடித்த டாக்டரை நோய் தாக்கியது.

பீஜிங்,

சீனாவில் பரவி வரும் ‘கொரோனா’ வைரசால் இதுவரை 490க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலை சீனாவை சேர்ந்த லீ வென்லியாங் என்ற டாக்டர் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டு பிடித்து விட்டார். சீனாவில் வுகான் மாகாணத்தில் உள்ள மத்திய மருத்துவமனையில் தான் லீ வென்லியாங் வேலை செய்கிறார். 

அங்கு இதயம்  தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் தீராத காய்ச்சல்
காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கடல் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையில் பணியாற்றியவர்கள்.  இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கியதை அறிந்த டாக்டர் லீ வென்லியாங் அது ‘சார்ஸ்’ உருவாக காரணமாக புதிய வகை வைரஸ் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

உடனடியாக அவர் இது குறித்த தகவல்களை சக டாக்டர்களுக்கு டிசம்பர் 30-ந்தேதி அனுப்பி உள்ளார். உள்நோயாளிகளை கையாளும் போது பாதுக்காப்புக்காக மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என நண்பர்களை அறிவுறித்தினார். 

இந்த தகவல்கள்  இணையதளத்தில் வேகமாக பரவியதால் சீன பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் டாக்டர் லீ வென் லியாங்கை கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே டாக்டர் லீ வென்லியாங் படுத்த படுக்கையில், வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் எனக்கு புதிய வகை வைரஸ் தாக்கி உள்ளது. சீனாவில் எனக்கு தெரிந்த மட்டும் 10 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை வெளியே சொல்ல முயற்சித்த என்னை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்.

இந்த வைரஸ் ‘சார்ஸ்’ போலவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். சீன மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறி இருந்தார். வைரசை முதலில் கண்டு பிடித்து லீ வென்லியாங்குக்கு அரசு நன்றி தெரிவிக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Next Story