நாளை இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே


நாளை இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே
x
தினத்தந்தி 6 Feb 2020 8:21 AM GMT (Updated: 6 Feb 2020 8:21 AM GMT)

இலங்கை பிரதமர் ராஜபக்சே 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.

கொழும்பு,

இலங்கை பிரதமர்  மகிந்த ராஜபக்சே,  4 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகை தருகிறார். 7 -ஆம் தேதி இந்தியா வருகை தரும் ராஜபக்சே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.  இருநாடுகளுக்கும் இடையே உள்ள  உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில்  தலைவர்களின் சந்திப்பு இருக்கும் என்று இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பிராந்திய கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மாலத்தீவு, இலங்கை இந்தியா ஆகிய நாடுகள் இணைந்த முத்தரப்பு  கடல் சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பு ஆகியவை பற்றி இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, வாராணசி, சர்நாத் , புத்தகயா, திருப்பதி ஆகிய  இடங்களில் உள்ள கோவில்களுக்கு செல்லவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் 10 கொண்ட உயர்மட்ட குழுவும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தனது 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னர்  11-ம் தேதி ராஜபக்சே இலங்கை புறப்பட்டுச் செல்கிறார். கடந்த நவம்பரில் இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ராஜபக்சே இந்தியா வருவது இதுதான் முதல் முறையாகும். 

Next Story