ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு


ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2020 11:30 PM GMT (Updated: 7 Feb 2020 10:02 PM GMT)

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேலும் 41 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பீஜிங், 

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கு சென்றுவிட்டு வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை ஜப்பான் தனது பகுதிக்குள் அனுமதிக்காமல் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

அந்த கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதே தனிமைப்படுத்தலுக்கான தூண்டலை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, கப்பலில் இருந்த 3,711 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் கப்பலில் இருக்கும் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கப்பலில் இருக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 41 பேரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 பேர் ஜப்பானியர்கள் ஆவார்கள்.

இதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தைவானில் இருந்து ஹாங்காங்கின் கோய் டாக் பகுதிக்கு வந்த வேர்ல்ட் டிரிம் சொகுசு கப்பலில் வந்த மாலுமிகள், பயணிகள் என 3600 பேர் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story