தாய்லாந்தில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் சுட்டு கொலை


தாய்லாந்தில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 9 Feb 2020 7:14 AM GMT (Updated: 9 Feb 2020 7:14 AM GMT)

தாய்லாந்து நாட்டில் 26 பேரை கொன்ற ராணுவ வீரர் 17 மணிநேர போராட்டத்திற்கு பின் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.

நாகோன் ராட்சசிமா,

தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதியில் அமைந்த வணிக வளாகத்தின் முன் நேற்று மதியம் கார் ஒன்று வந்து நின்றது.  அதில் இருந்து இறங்கிய ராணுவ வீரர் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 12 பேர் பலியாகி உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.  தொடர்ந்து அவர் பணய கைதிகளாக பலரை பிடித்து வைத்திருந்து உள்ளார்.

சம்பவம் நடந்த பகுதி அருகே புத்த கோவில் ஒன்றும் ராணுவ தளம் ஒன்றும் அமைந்துள்ளது.  இந்நிலையில், பலி எண்ணிக்கை 21 ஆக அறிவிக்கப்பட்டது.  இதன்பின்பு 4 பேரில் உடல்களை வணிக வளாகத்தில் இருந்து சிறப்பு படையினர் கண்டெடுத்தனர்.  50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  அவர்களை காண அந்நாட்டு பிரதமர் பிரயூத் சான்-ஓ-சா சென்றார்.  பின்னர் வெளியே வந்த அவர் கூறும்பொழுது, கொல்லப்பட்டவர்களில் 13 வயது நிறைந்த சிறுவன் மற்றும் பாதுகாப்பு படையினரும் அடங்குவர்.  எங்களுடைய நாட்டில் இதற்கு முன் இதுபோல் நடந்தது இல்லை.  இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என கூறினார்.

ராணுவ வீரர் தனது வீட்டை விற்பதில் அவருக்கு இடையூறு இருந்து வந்துள்ளது.  தனிப்பட்ட விவகாரமே துப்பாக்கி சூடு நடப்பதற்கு காரணம் என பிரயூத் கூறியுள்ளார்.  இதனிடையே, 17 மணிநேர போராட்டத்திற்கு பின் இன்று அவர் சுட்டு கொல்லப்பட்டார்.  இதனால் அவருடன் சேர்த்து இந்த சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story