ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவு பேய் மழை


ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவு பேய் மழை
x
தினத்தந்தி 9 Feb 2020 11:15 PM GMT (Updated: 9 Feb 2020 10:43 PM GMT)

ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்து வருகிறது.

சிட்னி, 

ஆஸ்திரேலியாவை வாட்டி வதைத்த கடும் வெயிலால் அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது.

இந்த காட்டுத்தீயில் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல கோடி ஏக்கரிலான காடுகளும் அழிந்து போனதோடு, லட்சக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்தன.

இது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்திய நிலையில், அங்கு அண்மையில் காட்டுத்தீயின் தாக்கம் சற்று குறைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா கடலில் உருவாகியுள்ள டேமியன் புயலால், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கன மழை கொட்டி தீர்த்தது.

24 மணி நேரத்தில் மட்டும் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த சில நாட்களுக்கு இந்த பேய் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பேய் மழை காரணமாக 2 மாகாணங்களிலும் உள்ள பல நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடுவதால் சாலை போக்குவரத்து முடங்கி உள்ளது.

மேலும் சில இடங்களில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Next Story