ரஷியாவில் கொரோனா வைரசா? ரெயில் பயணிகளிடம் பீதியை கிளப்பிய வாலிபர்


ரஷியாவில் கொரோனா வைரசா? ரெயில் பயணிகளிடம் பீதியை கிளப்பிய வாலிபர்
x
தினத்தந்தி 11 Feb 2020 11:30 PM GMT (Updated: 11 Feb 2020 11:17 PM GMT)

ரஷியாவில் வாலிபர் ஒருவர் ரெயிலில் கொரோனா வைரசால் சுருண்டு விழுவது போல் நடித்து பயணிகளிடையே பீதியை கிளப்பினார்.

பீஜிங், 

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது. சீனாவை தவிர்த்து, இந்த கொடிய நோய் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

இதனால் கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய் தங்கள் நாட்டில் பரவாமல் இருக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட மெட்ரோ ரெயிலில் வாலிபர் ஒருவர் முகக்கவசம் அணிந்து, பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த ரெயில் அடுத்த ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த வேளையில், முகக்கவசம் அணிந்திருந்த வாலிபர் திடீரென சுருண்டு விழுந்தார்.

உடனே சக பயணிகள் அவருக்கு உதவி செய்வதற்கு முயற்சித்தனர். அப்போது, அங்கிருந்த சிலர் ‘கொரோனா வைரஸ்’ ‘கொரோனா வைரஸ்’ என அலறினர். இதனால் ரெயிலில் பெரும் பதற்றம் உருவானது.

பயணிகள் அனைவரும், கீழே விழுந்து கிடந்த வாலிபரை விட்டு விலகி சென்றனர். பின்னர் ரெயில் நிலையம் வந்ததும் பெரும்பாலான பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி ஓடினர்.

இதற்கிடையில் ரெயிலுக்குள் விழுந்து கிடந்த அந்த வாலிபர் சாதாரணமாக எழுந்து நின்றார். பின்னர் அவர் தனக்கு ‘கொரோனா வைரஸ்’ இல்லை என்றும், பயணிகளிடம் குறும்பு செய்வதற்காக இவ்வாறு செய்ததாகவும் கூறினார்.

இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் கரோமட் ஷபோரோவ் (வயது 22) என்பதும், அவர் ‘பிராங்’ வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ‘யூடியூப்’ சேனல் ஒன்றை நடத்தி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

Next Story