சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர் - 2 விமானிகள் உடல் கருகி பலி


சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர் - 2 விமானிகள் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 13 Feb 2020 12:00 AM GMT (Updated: 12 Feb 2020 5:39 PM GMT)

சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதில் 2 விமானிகள் உடல் கருகி பலியாகினர்.

டமாஸ்கஸ், 

சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள இத்லிப் மாகாணத்தின் சரி பாதிக்கும் அதிகமான பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளன. அந்த பகுதிகளை மீட்க ரஷிய படைகளின் உதவியோடு சிரிய ராணுவம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தாக்குதலை தொடங்கியது. தற்போது அங்கு அரசு படைக்கும், துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இத்லிப் மாகாணத்தின் நைரப் நகரில் சிரிய அரசு படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அங்கு பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரை குறிவைத்து, ராக்கெட் லாஞ்சரால் சுட்டனர். தாக்குதலுக்குள்ளான ஹெலிகாப்டர் தீப்பிழம்புகளுடன் வானில் கட்டுப்பாடற்று சுற்றி திரிந்தது.

பின்னர் நடுவானிலேயே சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய அந்த ஹெலிகாப்டர் கொழுந்து விட்டெரியும் நெருப்புடன் தரையில் விழுந்தது. இந்த தாக்குதலில் ஹெலிகாப்டரில் இருந்த 2 விமானிகளும் உடல் கருகி உயிரிழந்தனர். தங்களது ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை சிரிய ராணுவம் உறுதி செய்துள்ளது.

Next Story