கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் ஒருவர் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 1:16 PM GMT (Updated: 13 Feb 2020 1:16 PM GMT)

ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

டோக்கியோ,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை பலி எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது. 

சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில்  ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும்,  கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் மரணம் பதிவாகியிருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்த மூதாட்டியின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட அந்நாட்டு அரசு மறுத்து விட்டது.

உயிரிழந்த மூதாட்டி டோக்கியாவில் இருந்து தெற்கே உள்ள கனகவா மாகாணத்தில் வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்த மூதாட்டி சீனா சென்று வந்த எந்த தகவலும் பதிவாகவில்லை என அந்நாட்டு சுகாதார துறை மந்திரி கட்சுனோபு கட்டோ
தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story