கொரோனா வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ; வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை !


கொரோனா வைரஸ் பாதிப்பு  என சந்தேகம் ;  வடகொரியாவில் அதிகாரி சுட்டுக்கொலை !
x
தினத்தந்தி 14 Feb 2020 3:46 AM GMT (Updated: 14 Feb 2020 3:46 AM GMT)

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட அதிகாரி, பொது குளியல் அறைக்கு சென்றதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

பியாங்யாங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.  கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் இதுவரை மொத்தம் 1,483-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ், இதுவரை 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் வைத்து பரிசோதித்து வருகின்றனர். 

சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வடகொரியாவைச் சேர்ந்த  ஒரு மூத்த வர்த்தக அதிகாரி ஒருவர் அண்மையில் சீனாவுக்கு சென்று வந்தார். அவருக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால்,  தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். 

இந்த நிலையில்  எந்த முன் அனுமதியும் இன்றி பொது குளியலறைக்கு அந்த அதிகாரி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து  உடனடியாக  அவரை கைது செய்து வடகொரிய அதிகாரிகள்  சுட்டுக்கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

அதேபோல், வடகொரியாவின் தேசிய பாதுகாப்பு முகமையில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர், தான் சீனா சென்று வந்ததை மறைத்துள்ளார். இதைக் கண்டறிந்த வடொரிய அதிகாரிகள், அவரை உடனடியாக பதவியிறக்கம் செய்யப்பட்டு, தோட்ட வேலைக்கு மாற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.  

இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும்  கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வருகிறது. 


Next Story