சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் தகவல்


இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் : Photo Credit: PTI
x
இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் : Photo Credit: PTI
தினத்தந்தி 19 Feb 2020 5:06 AM GMT (Updated: 19 Feb 2020 5:06 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 132 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கொரோனா வைரஸ் உருவெடுத்ததாக சீன மருத்துவர்களே, டிசம்பர் 12 ஆம் தேதி உறுதிப்படுத்தியிருக்கின்றனர். நோயாளி ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலை அறிகுறியாக கொண்டு இதனை சீன மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், மிகவும் அசட்டையாக இருந்த சீன சுகாதாரத்துறை, மற்றும் அதன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் டிசம்பர் 26ஆம் தேதி தான், அது சார்ஸ் போன்றதொரு வைரஸ் என ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து, டிசம்பர் இறுதியில், அது "கொரானா வைரஸ்" என உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியது. ஜனவரி மூன்றாம் தேதி, கொரானா, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவும் என பன்னாட்டு அறிவியல் அமைப்புகள் எடுத்துக்கூறின.

ஜனவரி மாதம் 20ஆம் தேதிதான், அந்த நோய்தொற்று, "கொரானா வைரஸ்" என சீன அரசு ஒப்புக் கொண்டது.

சீனப் புத்தாண்டையொட்டி, கடந்த மாதம் 18 ஆம் தேதி, 40 ஆயிரம் பேருக்கு, உகான் நிர்வாகம் விருந்து வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரிடம் கேள்வி எழுப்பியபோது மனிதரிடமிருந்து, மனிதருக்கு பரவும் என்பது பற்றி பின்னரே தெரியவந்ததாகக் கூறினார். அப்போது கூட தாங்கள் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதை ஒப்புக் கொள்ளவில்லை.

டிசம்பர் 1 ஆம் தேதி கொரோனா வைரஸ்  அறிகுறிகளுடன் முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்.அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் காய்ச்சல் அல்லது சுவாச அறிகுறிகளை கண்டறியப்படவில்லை. மேலும் ஜனவரி 2 ஆம் தே திவரையான ஒரு மாத காலத்தில் கொரோனா வியாதியால் பாதிக்கப்பட்ட 41 பேரில் 14 பேருக்கு,விவாதத்துக்குரிய உகான் உணவுச் சந்தையுடன் எந்த தொடர்பும் இருக்கவில்லை எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சொந்த நாட்டு மக்களின் தொடர் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்ட சீன அரசு, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டு தாக்கத்தை மூடி மறைப்பதிலேயே குறியாக இருந்ததாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். 

சன் வெய்டாங் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று சீனாவுக்கு முழு நம்பிக்கை உள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 14-வது நாளாக குறைந்து வருகிறது.  பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சுமார் 12 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளனர்.

சீனாவின் வலுவான பொருளாதாரத்தின் வலுவான அடிப்படைகளை பாதிக்கவில்லை என கூறினார்.

Next Story