நாங்கள் இந்தியாவில் 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்


நாங்கள் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் -டொனால்ட் டிரம்ப்
x
தினத்தந்தி 21 Feb 2020 5:49 AM GMT (Updated: 21 Feb 2020 8:24 AM GMT)

இந்திய பயணத்தின் போது 'மிகப்பெரிய' வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

லாஸ்வேகாஸ்

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் வருகிற 24ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.  டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார்.  வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.  அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றுகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிப்ரவரி 24-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானநிலையத்துக்கு வந்திறங்குகிறார். அவரை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்கிறார். அவருக்கு ராணுவ மரியாதை மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, சபர்மதி ஆசிரமம் சென்று பார்வையிடும் டிரம்ப், பின்னர், பிற்பகல் 1.15 மணியளவில் மோட்டேரா மைதானத்தில் நடைபெறும் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து, அங்கிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு தனது மனைவி மெலானியாவுடன் ஆக்ரா புறப்படுகிறார். மாலை 4.30 மணிக்கு ஆக்ரா செல்லும் ட்ரம்பை, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் வரவேற்கிறார்.

முன்னதாக, இந்திய வருகை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்த டிரம்ப், ‘இந்தியாவில் தன்னை ஏழு மில்லியன்(70 லட்சம்) பேர் வரவேற்பார்கள் என்று மோடி தெரிவித்துள்ளதாக உற்சாகமாக பேசியிருந்தார். அவருடைய பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அகமதாபாத்தின் மொத்த மக்கள் தொகையே 80 லட்சம் இருக்கும். இந்தநிலையில், எப்படி 70 லட்சம் பேர் டிரம்பை வரவேற்க முடியும் என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்து தெரிவித்த அகமதாபாத் மாநகராட்சி ஆணையாளர் விஜய் நெஹ்ரா, ‘ஒரு லட்சம் பேர் வரை திரண்டு டிரம்பை வரவேற்பார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து மைதானத்திற்கு செல்லும் வழி நெடுக  மக்கள் வரிசையில் நிற்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த பாதையில் இதுவரை, 28 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன, அவை நாட்டின் பல்வேறு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும், கலைஞர்கள்  நிகழ்ச்சிகளை நடத்துவர்.

இது குறித்து  அகமதாபாத் மாநகராட்சி தனது டுவிட்டரில் 22 கி.மீ ரோடு ஷோவுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள்  ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர். இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு வழங்க இது  அகமதாபாத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பு என கூறி உள்ளது.



லாஸ் வேகாஸில் நடந்த கைதிகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது :-

"நான் அடுத்த வாரம் இந்தியாவுக்குச் செல்கிறேன், நாங்கள் பேசுகிறோம், அவர்களுக்கு 150 கோடி மக்கள் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் பிரதமர் மோடி பேஸ்புக்கில் நம்பர் டூ, அதைப் பற்றி யோசியுங்கள். நம்பர் ஒன் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? டிரம்ப்.

நாங்கள் இந்தியாவில் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் ஈடுபடலாம். அமெரிக்காவிற்கு முதலிடம் கொடுக்காவிட்டால், நல்ல ஒப்பந்தம் கிடைக்காவிட்டால் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மந்தமடையக்கூடும் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

Next Story