குவைத், பஹ்ரைனில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு


குவைத், பஹ்ரைனில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2020 8:42 AM GMT (Updated: 24 Feb 2020 8:42 AM GMT)

குவைத் மற்றும் பஹ்ரைனில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

துபாய்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் பாதிப்பு உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.  கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,592 பேர் வரை பலியாகியுள்ளனர்.  உலகம் முழுவதும் 79 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.  இந்த எண்ணிக்கை உயர கூடும் என்ற அச்சம் தொடருகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளது.

இதனை அந்நாடுகளை சேர்ந்த சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.  அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரான் நாட்டில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இவர்களில் குவைத் நாட்டில் 3 பேருக்கும், பஹ்ரைனில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story