தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
தென்கொரியாவில் தீவிரமுடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்து உள்ளது.
சியோல்,
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் உகானில் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்து உள்ளது.
சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியாவில் வேகமுடன் பரவ தொடங்கியுள்ளது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 763 ஆக இருந்தது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இன்று 893 ஆக அதிகரித்து உள்ளது.
தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில், கூடுதலாக 2 பேர் பலியான நிலையில், இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்து உள்ளது.
தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை 'ரெட் அலார்ட்' ஆக உயர்த்தியுள்ளது. காய்ச்சல் அல்லது சுவாச பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தென்கொரியாவில் 4வது பெரிய நகரான டேகு நகரில் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன. இதனால் அந்த பகுதிக்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் சென்று பார்வையிட்டார். இதன்பின் அவர் கூறும்பொழுது, நிலைமை படுமோசம் ஆக உள்ளது. இந்த வைரசுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story